நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சபரிமாலா மனு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முன்னாள் அரசு பள்ளி ஆசிரியரும் பெண் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவருமான சபரிமாலா குடியரசு தலைவர் அலுவலகத்திற்கும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது தனது அரசுப் பணியைத் துறந்த சபரிமாலா, பெண் விடுதலை கட்சியைத் தொடங்கி சமூக செயல்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 தேர்வில் 197 மார்க் கட்-ஆப் எடுத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் இதுவரை 18 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளை வைத்துக்கொண்டு நீட்தேர்வு என்ற ஒற்றை தேர்வு முறையை வைத்திருப்பது மாணவர்கள் மீதான கொலை முயற்சி. இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களை மனநோயாளிகளாக்கி வருகிறது.எனவே லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.