பூ மார்க்கெட்டில் அலை மோதும் மக்கள் கூட்டம்

கோவை பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த சூழலில், பூ வங்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அவர்களிடம் 2 தவனை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரயில் நிலையங்களிலும் வரும் பயணிகளுக்கு தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து, அதற்காக பூக்கள் வாங்குவதற்காக பூ மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை வியாபாரிகள் ஒழுங்குபடுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கூட்ட நெரிசலில் கொரோனா பரவலை தடுக்க அங்கு முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மாநகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி பரிசோதனை நடத்தினர்.