உலக தர வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றதோடு, அவருக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா உலக தர வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு 16-வது இடத்தில் இருந்தார்.

ஒலிம்பிக்கில் அவர் 87.58 மீட்டர் தூரம் எறிந்ததன் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையே நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற தருணத்தை டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் நிகழ்ந்த 10 ஆச்சரியமான தருணங்களில் ஒன்றாக உலக தடகள சம்மேளனம் அங்கீகரித்து உள்ளது