8 பேருக்கு  மறுவாழ்வு அளித்த தையல் தொழிலாளி

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செந்தாமரை (51) கடந்த  ஜூன் 6 ஆம் தேதி வாகன விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த   ஜூன் 8 ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது .

அதனைத் தொடர்ந்து அவரது மனைவி அம்பிகா மகன் ஓமிஷ், மகள் காயத்திரி ஆகியோர் செந்தாமரையின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதயம், கல்லீரல்  சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சீறுநீரகம்  கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  இருதயம்  சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் என்.  பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய செந்தாமரை குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.