இனிவரும் காலங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் – சீமான்

கோவை சிவானந்தாகாலணி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது பேசிய அவர், இனிவரும் காலங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் எனத் தெரிவித்தார். பாஜகவின் உண்மையான “பி” டீம் திமுக தான் எனவும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்கின்ற திமுக அவர்களுக்கு தேர்தலில் குறைவான இடங்களே கொடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

திருடன் கூட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திருடன், திருடன் என கத்துவது போல “பி” டீம் என திமுக சொல்கிறது, திமுக போன்ற நாடகக்காரர்களை பார்க்க முடியாது என தெரிவித்தார்.

எத்தனை முறை நட்டா வந்தாலும், பாஜக நோட்டாவிற்கு கீழ் தான் இருக்கும், நாம் தமிழருக்கு வாக்களிப்பதால் பாஜக வந்துவிடும் என அஞ்சும் கோழைகள் வாக்களிக்க வேண்டாம் எனவும், நாங்கள் இருக்கும் வரை பாஜக வராது என நம்புபவர்கள் எனக்கு வாக்களியுங்கள் என அவர் கூறினார்.