ஆன்லைன் கல்வியால் இந்த கல்வியாண்டு வீணாகவில்லை

-மத்திய கல்வி அமைச்சர்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு அனைத்து மாணவிகளும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வில்லை. மாறாக முனைவர் பட்டம் பெறுவோர் மற்றும் பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெற்ற 166 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் இந்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : சுவாமி விவேகானந்தர் கூறியது போல் பறவைகளுக்கு இரண்டு இறக்கையும் வளர வேண்டும் அப்போது தான் பறக்கும்.  அதே போல் ஆண்களுக்கு கிடைப்பது போல பெண்கள் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இருபாலரும் கல்வி கற்றால் தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். நான் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் போதும் பெண்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை பார்க்கிறேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கென ஒரு தரம் உள்ளது. இன்னும் தரம் உயரும் என எதிர்பார்க்கிறேன். கொரோனா காலத்திலும் இந்த கல்வியாண்டு வீணாகவில்லை. தேர்வுகளும் தடையின்றி நடத்தப்பட்டுள்ளது. இத்தனை கோடி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கொடுத்தது இந்தியாவின் சாதனை.