தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!

தமிழகத்தில் மேகத்திரளின் அலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், இதேபோல மழை பொழிவு அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல ஊர்களிலும் இரவு தொடங்கிய மழை பல மணி நேரம் நீடித்தது. சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை பகலிலும் தொடர்ந்தது. மழை பொழிவு அடுத்து வரும் நாட்களிலும் தொடருமென சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.

9 ஆம் தேதி அன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.