நான் நல்லவனா? கெட்டவனா? -சத்குரு

கேள்வி: நான் தேடிப்போய் யாருக்கும் உதவி செய்ய மாட்டேன். அதேசமயம் மனதாலும் பிறருக்கு எந்தக் கெடுதலும் நினைக்க மாட்டேன். நான் நல்லவா? கெட்டவனா?

சத்குரு: மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

தன்னைப் பற்றிய பொறுப்பைக்கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள் ஒரு வகை. அவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.

மற்றவர்களைப் பற்றிய கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவன் அடுத்தவன். இவன் மிருகத்தைப் போன்றவன். மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும்போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்றபடி, அது உங்களை எதிரியாகப் பார்த்து அடித்துப் போடவில்லை.

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால், தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை. இவர்கள்தாம் மனிதன் என்ற பதத்துக்கு அருகதை உள்ளவர்கள். மற்றபடி, யாரோ சொன்னதற்காக, மற்றவர்களுக்கு உதவுகிறவர்கள் இதில் சேர்த்தி இல்லை.

சங்கரன் பிள்ளைக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார் அவர். அறைக்கதவு தட்டப்பட்டபோது, டக்கென்று தொலைபேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். கம்பெனி முதலாளியுடன் உரிமையோடு பேசுவதுபோல் பாவனை செய்தார். பிறகுதான் உள்ளே வந்தவனை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, “சொல் தம்பி, உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அவன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான், “ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு கனெக்சன் கொடுக்க வந்திருக்கிறேன்!”.

மற்றவர்களிடத்தில் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்கு உடைபடுவார்கள். அவர்கள் போலிகள்! உங்களிடம் மனித குணம் முழு வீச்சில் இயல்பாகவே இயங்கினால், எந்தக் கோட்பாட்டுக்காகவும் காத்திருக்க மாட்டீர்கள். உங்கள் சக்திக்கு உட்பட்டு, இயல்பாகவே அடுத்தவருக்குத் தேவையானதைக் கவனித்து வழங்குவீர்கள். எங்கெங்கு தேவையோ, அங்கெல்லாம் உங்கள் கரங்கள் தாமாகவே உதவியுடன் நீளும்!

கேள்வி: என்னால் எப்படி எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு இருக்க முடியும்?

சத்குரு: உங்களால் முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது தவறில்லை. செய்யக்கூடியதைச் செய்யாமல் விட்டுவிட்டால்தான், நீங்கள் மனிதராக இருக்கவே தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள். மனிதன் எட்டக்கூடிய உயரங்களை எட்டாமலேயே இருப்பது எவ்வளவு பரிதாபமான நிலை? கடவுளை விடுங்கள். அடுத்தவரை விடுங்கள். உங்களைப் பற்றிக் கவனம் கொள்ளுங்கள். நீங்கள் ஆனந்தமாக இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும். மனிதர்கள் மேம்பட்டால்தான் மனிதத்தன்மை மேம்படும். மனிதத்தன்மை மேம்பட்டால், யாரும் யாருக்கும் எந்த போதனையும் செய்யத் தேவை இருக்காது. அதனால்தான் யோகாவில் கடவுளைப் பற்றிக் கவனிப்பதில்லை. மனிதர்களைப் பற்றியே கவனம் கொள்கிறோம்.