கதிர்வீச்சு தொழில்நுட்பத்தில் கிருமிநாசினி தெளிப்பு முறை

அனைத்து விதமான பொருட்களையும் சுத்திகரிக்கும் வகையில் புற ஊதா கிருமி நாசினி கதிர்வீச்சு தொழில்நுட்ப முறையில் செயல்படும் எளிய வகையிலான இயந்திரங்களை கோவையை சேர்ந்த இளம் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

நோய் தொற்று பரவல் அதிகரித்து கொண்டிருக்கும் இச்சூழலில் இதனை தடுக்க அரசு காட்டிய வழிமுறைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் வேண்டும் என்பது முக்கிய அறிவுரைகளில் ஒன்றாக உள்ளது. இதனை எளிய முறையில் மேற்கொள்ள புற ஊதா கிருமி நாசினி கதிர்வீச்சு தொழில்நுட்ப முறையில் சாதாரணமாக பயன்படுத்தும் மொபைல் போன்கள், பேனா, பணத்தாள்கள், முக கவசங்கள், உடைகள் என தினந்தோறும்  பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் சானிட்டைசிங் செய்யும் விதமான நான்கு வெவ்வேறு வகை இயந்திரங்களை கோவையை சேர்ந்த இளம் பொறியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.

இதனை ரத்தினம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அடல் இங்குபேஷன் சென்டரை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து ரத்தினம் கல்வி நிறுவங்களின் தலைவர் மதன் ஏ செந்தில் கூறுகையில், இது உபயோகமில்லாத குளிர்சாதனப் பெட்டி, ஓவன் போன்ற சாதாரணமாக  வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் இந்த வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும் எனவும், மேலும் இந்த புற ஊதா கிருமி நாசினி இயந்திரங்களை சாதாரண மக்களும் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் இதனை தாமாக அவர்களே இணைக்கும்படி இதனை தயாரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் பணத்தாள்கள், காய்கறிகள், பால் பாக்கெட்டுகள், டெலிவரி மூலம் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்படும் பொருட்கள் ,கை கடிகாரம், மொபைல் போன்கள் அல்லது எந்தவொரு ஆவணங்களும் இந்த இயந்திரம் மூலம் சுத்திகரிக்க இயலும் எனவும், தற்போதைய கொரோனா வைரஸ் மட்டுமின்றி எதிர் காலத்தில் அனைத்து விதமான கிருமிகளை அழிக்க இந்த இயந்திரங்கள் உதவும் என தெரிவித்தார்.