அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது -கார்த்திகேய சிவசேனாதிபதி

குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கோவை நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘கோவையில் 2021க்கு பிறகு முதல்வரின் திட்டத்தால், போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சேலம் – சென்னை நெடுஞ்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சிக்கிறது. மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரியாகக் கொடுத்தால், திரும்ப 29 பைசா தருகிறார்கள். 71 பைசாவைத் திருடி விடுகிறார்கள். பா.ஜ.க.-வின் தில்லாலங்கடி அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும் பலன் அடைந்து வருகின்றனர். இந்தியாவில் அதிக முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. கோவையைப் பொறுத்தவரை 20 கிமீ-க்கு ஒரு தொழில் உள்ளது. கல்வி நிறுவனங்களில் கோவை சிறந்து விளங்கி வருகிறது. கொங்கு நாட்டில் 20 விழுக்காடு அருந்ததியர் இன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க. அரசு. அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளனர். ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லும் அண்ணாமலை அருந்ததியின மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துள்ளார்.

அண்ணாமலை அம்மா ஊரில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் அவர் தற்போது கல்வி முக்கியமில்லை என்று கூறுகிறார். கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரியாக அண்ணாமலை உள்ளார். கலைஞர் கொடுத்த ஓபிசி பிரிவு கோட்டாவில் படித்து ஐபிஎஸ் ஆனவர் அண்ணாமலை. அவரது குடும்பத்தினருக்குப் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 2 தகரப் பெட்டியுடன் கோவை வந்தேன் என்று அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள அண்ணாமலை ரூ.5 லட்சத்துக்கு வாட்ச் கட்டி உள்ளார். அவர்களது நண்பர்கள் தனக்கு லட்சக் கணக்கில் செலவு செய்கிறார் என அண்ணாமலை கூறுகிறார். இதிலிருந்தே தமிழகத்தின் வளர்ச்சி தெரிகிறது. அண்ணாமலை ஓட்டும் வண்டியும் டெல்லி போகாது. தாமரையும் மலராது. டெல்லியில் பா.ஜ.க. முடிவுக்கு வரப் போகிறது. கோவைக்கு வரவுள்ள ஸ்டேடியம் குறித்து அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு, கோவைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பது அரசுக்குத் தெரியும்.

குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தேர்தல் பொறுப்பாளர் ஷியாம் சுந்தர், கழக மருத்துவ அணி டாக்டர்.கோகுல், சுற்றுச்சூழல் அணி ஸ்ரீ சத்யா கோவை தங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.