அதிமுகவில் சர்வாதிகாரம்! தர்மம் மறுபடியும் வெல்லும் என ஓ.பி.எஸ். ட்வீட்

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்து முழக்கமிட்டனர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றனர்.

அப்போது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.