பாஜக கூட்டணியின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜுலை 18 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜுலை 21ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தார்.
எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரான முர்மு போட்டியிடுகிறார். 64 வயதான இவர், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண்.
ஒடிசா மாநிலம்,புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லுாரியில் திரௌபதி முர்மு படித்தார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர், திரௌபதி முர்மு தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராகத் தொடங்கினார், பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக ஆனார். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்துள்ளார்
.