“விடா முயற்சி, கடின உழைப்பு, கடின பயிற்சியே வெற்றிக்கான பாதை”!

விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் விடா முயற்சி, கடின உழைப்பு, கடின பயிற்சி ஆகியவையே அவர்களை வெற்றிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 35-வது ஆண்டு விளையாட்டு விழாவில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பாஸ்கரன் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் வடிவேலு, சா்வதேச, தேசிய மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்தக் கல்லூரி மாணவர்கள் புரிந்து வரும் சாதனைகளைப் பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார். பாரதியார் பல்கலைக்கழக அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: விளையாட்டு வீரர்கள் ஒரு லட்சியத்தை தங்களுக்குள் விதைத்துக் கொள்ள வேண்டும். அதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே செல்ல வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டில் சாதித்தால் உங்களுக்கான வாய்ப்பு கதவுகள் எளிதாக திறக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்களால், விளையாட்டில் மட்டுமல்லாமல் பொதுவாழ்விலும் எளிதாக ஜெயிக்க முடியும். காரணம் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் அவர்களிடம் மட்டுமே காணப்படும். தோல்வியைக் கண்டு துவள மாட்டார்கள். தொடர்ந்து போராடுவார்கள். விடா முயற்சி, கடின உழைப்பு, கடின பயிற்சி அவர்களை வெற்றிக்கான பாதையில் அழைத்துச் செல்லும்.

இந்தக் கல்லூரியில் இருக்கும் உலக தரத்திலான கிரிக்கெட் மைதானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளே, இங்கு படிக்கும் மாணவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்கி, உலகம் போற்றும் சாதனையாளர்களாக மாற்றி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் உள்நாட்டு போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை சாதனைப் படைத்துள்ளனர். வரும் காலங்களில் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், துறைத்தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர் திரளாகக் கலந்து கொண்டனர்.