ஹிஜாப் தடையை கண்டித்து இஸ்லாமிய இயக்கம் சார்பில் மாநாடு

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஹிஜாப் விவகாரம் சம்பந்தமாக கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மதச்சார்பின்மை காக்க மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கர்நாடக மாநில அரசு கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை பிறப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் கூறியது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்கள், உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மதச்சார்பின்மை காக்க மாநாடு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுல்தான் அமீர், சாதிக் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை நிர்வாகி மௌலவி தர்வேஷ் ரஷாதி, மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் மு. முஹம்மது இஸ்மாயில், jaqh மாநில பொதுச்செயலாளர் குளச்சல் நூர் முஹம்மது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் முஹம்மது அமீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் காயல் மகபூப், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எஸ். எம்.பாக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா, வஹ்த்ததே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் கலந்து கொண்டு ஹிஜாபுக்கு தடை விதித்த கர்நாடகா உயர் நீதி மன்றத்தையும், கர்நாடக அரசையும் கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.