எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு என்றும், அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதலமைச்சர் பேசுகையில்: கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார்.

அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது, மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது, பால் பேதம் பார்க்காது. இத்தகைய அன்பை அடிப்படையாகக் கொண்ட எதுவும், யாரும் ஏற்கத்தக்கவர்கள். இதில் பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும். அந்த உணர்வை ஊட்டும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா அமைந்திருக்கிறது.

நம்முடைய மொழியால், இனத்தால் தமிழர்கள். வழிபாடு என்பது அவர்களின் விருப்பம். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசு மட்டுமே மக்களுக்காக அனைத்தையும் வழங்கி விடமுடியாது இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று பேசியுள்ளார்.