கலைஞர் கோப்பைக்கான கால் பந்தாட்ட போட்டி: திருவனந்தபுரம் பி ஜூஸ் அணி வெற்றி

கலைஞர் கோப்பைக்கான கோவையில் நடந்த ஐவர் கால் பந்தாட்ட போட்டியில் திருவனந்தபுரம் பி ஜூஸ் அணி ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பையை தட்டிச் சென்றது.

கோவை திமுக கிழக்கு மாநகர் மாணவரணி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில் கலைஞர் கோப்பை ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தென் இந்தியாவைச் சேர்ந்த 78 அணிகள் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நாளான இன்று நடந்த கடுமையான போட்டியில் திருவனந்தபுரம் பிஜூஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

இந்திய ஜூனியர் அணி வீரர் ரீகன் பங்கேற்ற காரைக்குடி மணி இரண்டாம் இடத்தை பிடித்தது. முதலிடம் பிடித்த திருவனந்தபுரம் பிஜுஸ் அணிக்கு கோவை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பையை பரிசாக பரிசளித்தார். மேலும் இரண்டாவது இடம் பிடித்த காரைக்குடி அணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர், திமுக மாணவரணி அமைப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.