தமிழகத்தில் நல்லாட்சி தொடர தொழில்துறையினர் நேசக்கரம் நீட்ட வேண்டும்

-முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் கோவை தொழில் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது விமான நிலைய விரிவாக்கம், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் செயற்கை விலை உயர்வை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்வைத்தனர்.

தொழில் கூட்டமைப்பினர் இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தொழில் அமைப்புகளின் கோரிக்கைகளில் இயன்றவைகளை அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என உறுதி அளித்தார். சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு வருவதால் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்த முதலமைச்சர் இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தேர்வாகி உள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழகத்தில் தொழில் துறையினருக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் மின் வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மின் வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் எங்கெல்லாம் பாலங்கள் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் கோவையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர தொழில் துறையினர் நேசக்கரம் நீட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.