புதிய பொலிவுடன் புணரமைக்கப்பட்ட உக்கடம் காய்கறி மார்க்கெட்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் உக்கடம் ராமர் கோயில் வீதியிலுள்ள தினசரி காய்கறி மார்க்கெட்க்கு கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், இங்கிருந்து கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதுதவிர கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து காய்கறி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக இந்த மார்க்கெட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரூபாய் 95 லட்சம் செலவில் காய்கறி மார்க்கெட்டில்  கான்க்ரீட் தளங்கள் மற்றும் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு புதிய தரை தளங்கள் அமைத்து மார்க்கெட்டை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து புதிய பொலிவுடன் கூடிய உக்கடம் மார்க்கெட்டை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் துவக்க விழாவில் பேசிய அமைச்சர், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எனவும், கொரோனா நோய் சிகிச்சை பணியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் அரசு விதிமுறைகளை பின்பற்றி முக கவசங்கள் அணிவதும், நெரிசலை தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். விழாவில் உக்கடம் காய்கறி  மார்க்கெட் சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணன், செயலாளர் எஸ்.கே.சாகுல் அமீது, பொருளாளர் பாபு, துணைத் தலைவர்கள் அப்துல் ரஹீம், சிக்கந்தர் மற்றும் எம்.எம்.ஐ.பாருக், துணைச்செயலாளர் முருகேஷ் ஜெமிஷா, அருணாச்சல ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.