சிறப்புக் குழந்தைகளுக்கான ‘ஸ்பெஷல் வாக்கத்தான்’

கோவை சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் வாகத்தான் என்ற நடைபயண நிகழ்ச்சி கோவையில் வரும் டிசம்பர் 8 தேதி நடைபெறுகிறது. 2500 பேர் பங்கேற்கிறார்கள்.

கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு வாகத்தான் நடைபயணம் கோவையில் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கௌமாரம் பிரசாந்தி பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் தீபா மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சின்னவேடம்பட்டி பகுதியில் 6 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் 200 மாணவர்கள் 150 ஆசிரியர்கள் உள்ளனர். சிறப்பு குழந்தைகளை கல்வி கற்பதோடு, தொழில் சார்ந்த பணிகளிலும் கற்றுத்தரப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் பல்வேறு உற்பத்தி பொருள்களை தயாரித்து, கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

எங்கள் பள்ளி சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்பெஷல் வாக்கத்தான் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமுதாயத்தில் சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது முயற்சியாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் ஸ்பெஷல் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் வேற்றுமையிலும் ஒருங்கிணைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம். இதில் 2500ல் இருந்து 3000 பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கிறோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கௌமாரம் பிரசாந்தி பள்ளியின் கல்வியியல் இயக்குனர் ஷர்மிளா கௌதம், ஒருங்கிணைப்பு இயக்குனர் ஸ்ரீலதா வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.