இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி தலைமையில் நடைபெறுகிறது

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பாஜக கூட்டணி? முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கும் எடப்பாடி!

சென்னை: ஓ. பன்னீர்செல்வம் அடுத்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 5.7.2023 – புதன் கிழமை காலை 9 மணிக்கு, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, ஓபிஎஸ் அடுத்து நடத்த இருக்கும் மாநாடு, அதிமுக – பாஜக கூட்டணி, அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகளின் விவரம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி சென்னை அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும். எங்களுடன் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.