குடும்பத்துல 4 குழந்தைங்க இருக்கனுங்க!

விளக்குகிறார் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்

மருத்துவ துறையில் 50 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட நான், கிராமத்தில் பிறந்தவன். எனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றது. மருத்துவம் படிக்காத, அதே சமயத்தில், கை வைத்தியம் தெரிந்த பெண்தான் பிரசவம் பார்த்தார். அன்றைய வாழ்க்கை சூழல், இன்று இல்லை. எல்லாமே மாறிவிட்டது.

3 மில்லி மீட்டர் அளவு உள்ள கருவுற்ற முட்டை, 3 கிலோ எடையுடன் பூமியில் பிறக்கிறது. இது, அதிசயக்கத்தக்க ஒரு செயல். குழந்தையை உருவாக்குவது கடவுள். அந்த குழந்தை வேண்டாம் என கருவிலேயே கலைக்க முயல்கிறான் மனிதன். மனிதன் செய்யும் பல தவறுகளில் இதுவும் ஒன்று.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரே ஒரு குழந்தை போதும், ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரும் சவால் என்கிறார்கள். சவால் என்பது நமது மனதை பொருத்தது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 40 சதவீத மக்கள் 40 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கிறார்கள். பலர், மேலை நாடுகளில் பணியாற்றுகின்றனர். பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தாலும், ஒரு குழந்தை போதும் என்கிறார்கள்.

என்னைக் கேட்டால், ஒரு குடும்பத்திற்கு 4 குழந்தைகள் இருக்க வேண்டும் என்பேன். குழந்தைகள் அதிகம் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். Wife இல்லையேல் Life இல்லை. குழந்தை இல்லையேல், மகிழ்ச்சி இல்லை.

நான்கு குழந்தைகள் இருக்கும் ஒரு வீட்டில், முதல் குழந்தை, மற்ற குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் அளவுத்திறனை தானாக பெறுகிறது. மக்கள் செல்வம்தான் மகத்தான செல்வம்.

நம்மிடம் இருக்கும் அதிக மக்கள் தொகையை கொண்டு, பொருளாதாரத்தில் இந்தியாவை முன்னேற்ற முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் படும் சிரமங்களை ஆண்கள் உணர வேண்டும். அவர்களுக்கு துணை நிற்க வேண்டும். பிரசவம் என்பது மிகப்பெரிய சிக்கலான விஷயம். இதனை, கே.ஜி மருத்துவமனை எளிமையாக்குகிறது.

குழந்தைகள் – செல்வம் என்றால், அந்த குழந்தைகளை பத்திரமாக பெற்றெடுக்க உதவும் மருத்துவர்கள் – கடவுளைப்போன்றவர்கள். சிரித்த முகம் என்பது மருத்துவர்களிடையே இருக்க வேண்டிய தலையாய குணாதிசயம். முகம் மலர்ந்து இனிமையாக பேசுவது, அகம் குளிர்ந்து கொடுப்பதைவிட மேலானது.

கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால்

– டாக்டர் சீனிவாசன், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர்

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிறந்த உடன் குழந்தை நன்றாக அழுகிறதா? என ஆராய வேண்டும். அப்படி அழுதால், அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம்.

பிறக்கும்போது, குழந்தையின் எடை சராசரியாக 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். எடை குறைவாக இருந்தால், ’’ஹை ரிஸ்க் பேபி’’ என வகைப்படுத்தப்பட்டு, அதற்குரிய சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.

வழக்கமாக, 38 வாரம் முதல் 40 வாரத்துக்குள் குழந்தை டெலிவரி ஆக வேண்டும்.அதற்கு, முன்னதாகவே பிறந்து விட்டால் ’’ஹை ரிஸ்க் பேபி’’ என அழைக்கப்படும்.

குழந்தை பிறந்தவுடன், தேன்கலந்த தண்ணீர், சர்க்கரை கலந்த தண்ணீர் கொடுக்க கூடாது. அடுத்த அரை மணி நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். தாய்ப்பாலில் 75 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவு. சத்தான உணவு. இன்றை சூழ்நிலையில், கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால்தான். தாய்ப்பால் கிடைக்காத தாய்மார்கள், கோவை அரசு மருத்துவமனையை அணுகி, அங்குள்ள தாய்ப்பால் வங்கியில், உரிய விதிமுறைகளுடன் தாய்ப்பால் பெறலாம். தொடர்ச்சியாக 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்கு பிறகு, மருத்துவர்கள் அறிவுரைப்படி, அதற்குரிய உணவு வகைகள் வழங்கலாம்.

பிறக்கும்போது, சில குழந்தைகளுக்கு கண், மஞ்சள் கலராக இருக்கும். இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. இது, அடுத்த 15 நாட்களில் தானாக சரியாகி விடும்.

பச்சிளம் குழந்தைகளை, குளிக்க வைக்கும்போது, காது, மூக்கு, வாய் வழியாக எண்ணெய் ஊற்றும் பழக்கத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். இது, கூடவே கூடாது. இதன் காரணமாக இன்பெக்க்ஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடம்பிற்கு எண்ணெய் போடலாம், மசாஜ் பண்ணலாம்.

குழந்தை பிறந்தவுடன் தோல் ஊசி, மஞ்சள் காமாலை ஊசி 24 மணி நேரத்தில் போலியோ சொட்டு மருந்து எல்லாம் முறைப்படி கொடுக்கிறோம்.

பச்சிளம் குழந்தை, ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு முறை சிறுநீர் கழித்தால், சரியாக தாய்ப்பால் குடிக்கிறது எனவும், தாய்ப்பால் போதுமான அளவில் சுரக்கிறது எனவும் அர்த்தம். சில குழந்தைகள் இரவில் நன்றாக தூங்குகிறது, சில குழந்தைகள் பகலில் மட்டுமே தூங்குகிறது என பல பெற்றோர் கூறுவார்கள். இதில், பயப்படவோ, சந்தேகம் கொள்ளவோ எதுவும் இல்லை.

பச்சிளம் குழந்தை 24 மணி நேரமும் தூங்கும். படிப்படியாக அதன் தூக்கம் அளவு குறையும். தூங்கிக்கொண்டே இருந்தாலும், இடையில் எழுப்பி, தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தையின் எடையை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி சீராக இருக்கிறதா? என்பதை ஆய்வுசெய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் மருத்துவத்துக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் இங்கு உள்ளன. பயன்படுத்த வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

சுகப்பிரசவம் என்பது பெரும் வரம்

– டாக்டர் சந்திரகலா மாறன், பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்

மகப்பேறு மருத்துவ துறையில் எனக்கு 25 வருட அனுபவம் உள்ளது. தற்போதைய காலத்தில், கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. இதை, நிறைமாதம் வரை கொண்டுசெல்வது பெரும் சவாலாக உள்ளது. 100 பேரில் 30 பெண்களுக்கு இந்த சிரமம் உள்ளது.

பிரசவத்தின்போது 100 பேரில், 10 பெண்களுக்கு வலிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், கைதேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே இதை எதிர்கொண்டு வெற்றிகாண முடியும். அதை, கே.ஜி மருத்துவமனை திறம்பட செய்து வருகிறது.

முன்பெல்லாம், கர்ப்பிணிகளில் 100 பேருக்கு 5 பேருக்கு சர்க்கரை நோய் இருந்தது. இது, தற்போது 30 ஆக உயர்ந்து விட்டது. உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி குறைவு போன்றவை இதற்கு காரணம்.

கர்ப்பிணிகளில், அதிக உடல்பருமன் கொண்டவர்கள், 100-ல்  5 முதல் 10 பேர் வரை மட்டுமே இருந்தனர். இது, இப்போது 40 ஆக உயர்ந்துவிட்டது. இதுபோன்ற பெண்களுக்கு சுகப்பிரவசம் என்பது இயலாத காரியமாக போய்விடுகிறது. சிசேரியன் செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும், பல சவால்களை எதிர்கொண்டு, நிறைமாதம் வரை கர்ப்பிணிகளை சிறப்பாக கண்காணித்து எளிமையான முறையில் பிரசவம் மேற்கொள்வது எங்களது தலையாய பணி.

கர்ப்பிணிகளுக்கு, சுகப்பிரவசம் என்பது பெரும் வரம். கே.ஜி. மருத்துவமனையில் 100-ல் 75 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கிறது. 25 சதவீதம் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. சில கர்ப்பிணிகளுக்கு, ’ஹை ரிஸ்க்’ இருந்தாலும் அதை திறம்பட எதிர்கொண்டு, நார்மல் டெலிவரி ஆக்குகிறோம்.

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது

அனுபவமிக்க மருத்துவர்களை அணுக வேண்டும்

–  டாக்டர் தர்மேந்திரா, குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சை நிபுணர்

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு, நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு மிகுந்த தேர்ச்சி தேவை.  பிறக்கும்போதே குழந்தைகளுக்கு வயிறு, நுரையீரல், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் குறைபாடு ஏற்படலாம். இவை, 28 நாட்களுக்கு உள்ளான குறைபாடு, 28 நாட்களுக்கு மேலான குறைபாடு என இரண்டாக பிரிக்கப்படும்.

சில குழந்தைகள், பிறக்கும்போதே மூச்சுவிட முடியாமல் சிரமப்படும். எச்சில் விழுங்க முடியாது, பால் குடிக்கும்போது உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பால் குடிக்க முடியாமல் திணறும்.

இதுபோன்ற குழந்தைகளுக்கு, பிறந்த ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை தேவை. சில குழந்தைகள், பிறக்கும்போதே ஆசனவாய் இல்லாமல் பிறக்கும். இதற்கும் ஆபரேஷன் தேவை.

சில குழந்தைகளுக்கு சிறுநீரக குழாயில் பிரச்சினை ஏற்படும். முறையாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும். இந்த அடைப்பு காரணமாக, பால் குடிக்கும்போது வாந்தி வரும். பால் குடலில் கட்டிவிடும். இதுபோன்ற குழந்தைகளுக்கு, 6 மாதம் முதல் 8 மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

24 வாரம் அல்லது 28 வாரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு  இன்குபேட்டர் உதவி தேவை. சில குழந்தைகளுக்கு ஆணுறுப்பு நேராக இல்லாமல் வளைந்திருக்கும். இதையும் ஆபரேஷன் மூலம் சரி செய்யலாம்.

சில குழந்தைகளுக்கு, ஆணுறுப்பின் முன் தோல் மூடி இருக்கும். இதற்கும் அறுவை சிகிச்சை தேவை. குழந்தைகள், தினமும் காலை, மாலை என இருவேளை மலஜலம் கழிக்க வேண்டும். இது, இரண்டு நாள், 3 நாள் என தள்ளிப்போனால், மலச்சிக்கல் பிரச்சினை உருவாகும். இதற்கும் எளிய சிகிச்சை உள்ளது.

குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சம்பந்தமான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வுகாண கே.ஜி.மருத்துவமனையில் எல்லா வசதிகளும் உள்ளன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. தாய்ப்பால், தலைமுறை செழிக்க வைக்கும்.

குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு

–  டாக்டர் ரோஷ்னா, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்

மழைக்காலம் வந்துவிட்டாலே, குழந்தைகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், இந்த காலங்களில்தான் டெங்கு, மலேரியா, இன்ஃப்ளுயென்சா, டைபாய்டு காய்ச்சல் போன்ற பல்வேறு தொல்லைகள் உருவாகிறது.

இந்த வகை நோய்கள், குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடியவை. இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கான முதல் கரணம் கொசுக்கள். தண்ணீர் எங்கெல்லாம் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் டெங்கு மற்றும் மலேரியா கொசுக்கள் உருவாகின்றன. எனவே, நமது வீட்டின் சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பூந்தொட்டிகள், டிரம்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் கேன்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பராமரிப்பில் உடல் சுத்தம் ரொம்பவே தேவை.

இரவில் கொசுக்களை விரட்டுவதற்கு, கடைகளில் கிடைக்கும் கொசு விரட்டிகள், கிரீம், லோஷன், ஸ்பிரே போன்றவை பாதுகாப்பானதா? என பல பெற்றோர் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு தோல் அலர்ஜி, ராஷஸ், பேட்ச்சஸ், தோல் அரிப்பு போன்ற நோய்கள் வந்துவிடுமோ எனவும் அஞ்சுகிறார்கள். பயம் தேவையில்லை, இவை முற்றிலும் பாதுகாப்பானதுதான்.

தண்ணீர் காரணமாகவும்  நோய்தொற்று ஏற்படும். இதில், டைபாய்டு, ஹெபடைட்டிஸ்-ஏ  போன்ற நோய்கள்  அடங்கும். இந்நோய் தொற்றை தடுக்க சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவிய பின்னரே உபயோகிக்க வேண்டும். உணவுப்பொருட்களை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும்.

பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு கை கழுவும் முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பிறகு நன்றாக கை கழுவ வேண்டும். கழிவறையை உபயோகத்திற்கு பின்னரும் நன்கு கை கழுவ, குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இதன்மூலம் டைபாய்டு, ஹெபடைட்டிஸ்-ஏ போன்ற நோய்களை தடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிறுப்போக்கு, வாந்தி முதலிய நோய்களுக்கு  உடலில் நீர்ச்சத்து குறைவதே காரணம் ஆகும். குளிர்காலம் என்பதால் தண்ணீர் அதிகம் கொடுக்கலாமா? என்ற சந்தேகமே வேண்டாம். உடலில் எப்போதும் நீர்சத்து இருக்க வேண்டும். தண்ணீர், பழச்சாறுகள்,எலுமிச்சை ஜூஸ், இளநீர் அல்லது ஓ.ஆர்.எஸ் உள்ளிட்ட பானங்கள் பருகலாம். ஆஸ்துமா, வீஸிங் இருக்கக்கூடிய குழந்தைகள் கார்போனேட்டட் குளிர்பானங்களை அரவே தவிர்ப்பது நல்லது.

மருத்துவ ரீதியாக இந்நோய்களின் தாக்கத்தை தடுக்க தடுப்பூசிகள் இருக்கிறது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் டைபாய்டு தடுப்பூசி மற்றும் 1 வயதுக்கு பின்னர் ஹெபடைட்டிஸ்-ஏ தடுப்பூசி செலுத்திக்கொள்வதன்மூலம் இதனை தடுக்கலாம்.

மழைக்காலங்களில், நன்கு காய வைத்து இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உள்ளாடைகளை இஸ்திரி செய்து உபயோகிப்பதன் மூலம் ஸ்கேப்பிஸ், அரிப்பு, பூஞ்சை தொற்று, தூசிப் பூச்சிகள் முதலியவற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளின் நலன் கருதி குழந்தைகளுக்கென பிரத்யேக சிறப்பு மருத்துவ குழுவினர் கே.ஜி. மருத்துவமனையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள். தயங்காமல் அணுகலாம்.

பனிக்குடம்  –  அது பத்திரம்

–  டாக்டர் சுவாதி, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்

மகப்பேறு என்பது பெண்களுக்கு கிடைத்த அரிய வரம். பத்து மாதம் சுமந்து குழந்தையை பெற்றெடுக்கும் அந்த தாய், அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பனிக்குடம் என்பது கர்ப்ப காலத்தில் குழந்தையை சுற்றியுள்ள திரவமாகும். இது, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. பனிக்குட  திரவம் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பாதுகாப்பையும் அளிக்கிறது. இத்திரவம் குழந்தைகள் கர்ப்பப்பையினுள் அசைவதற்கும் உதவுகிறது.

பனிக்குட திரவத்தின் அளவு கர்ப்பத்தின் 34 வாரங்களில் அதிகமாக இருக்கும். இது சராசரியாக 800 மில்லி இருக்கும். சுமார் 600 மில்லி பனிக்குட திரவம் முழு காலத்திலும் (40 வார கர்ப்பகாலம்) குழந்தையை சூழ்ந்திருக்கும்.

கர்ப்பப்பையில் வளரும் குழந்தை நகர்வதற்கும், சரியான எலும்பு வளர்ச்சி, நுரையீரல் வளர்ச்சி, தொப்புள் கொடியில் ஏற்படும் அழுத்தத்தை தடுக்கவும், குழந்தையை சுற்றி ஒரு நிலையான வெப்பநிலையை பராமரிக்கவும் பனிக்குடம் உதவுகிறது. வெப்ப இழப்பிலிருந்தும் பாதுகாக்கிறது. மேலும், வெளிப்புற காயங்களில் இருந்தும் மூலம் குழந்தையை பாதுகாக்க உதவுகிறது.

அதிகப்படியான பனிக்குட திரவம் – பாலிஹைட்ராம்னியோஸ் என்று அழைக்கப்படுகிறது. மிக குறைந்த பனிக்குட திரவம் – ஒலிகோஹைட்ராம்னியோஸ் என்று அழைக்கப்படுகிறது. அதிகப்படியான அளவு கொண்ட பனிக்குட  திரவம் கர்ப்பத்தை மிகவும் கவனமாக கண்காணிக்க காரணமாக இருக்கும்.

பனிக்குட  திரவக் கசிவானது பிரசவத்திற்கு முன்பு அல்லது பிரசவத்தின்போது பெண்களின் யோனியில் இருந்து வெது வெதுப்பான திரவம் கட்டுப்பாடின்றி வெளியேறுவது போல உணரலாம். சில பெண்களுக்கு சிறிது சிறிதாக வெளியேறும், சிலருக்கு சிறுநீர் போன்று அதிகம் வெளியேறும். இது பொதுவாக தெளிவாகவும் மணமற்றதாகவும் இருக்கும். பனிக்குட திரவம் உடைந்த 24 மணி நேரத்திற்குள் அருகில் இருக்கும் மருத்துவமனையை அணுகினால், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களை குறைக்கலாம்.

முன்கூட்டியே குழந்தை பிறப்பு என்பது, ஒரு குழந்தை சராசரி கர்ப்ப காலத்திற்கு முன்னரே பிறப்பதாகும். உதாரணமாக, கர்ப்பத்தின் 37வது வாரத்திற்கு முன் பிறப்பு ஏற்படலாம். பொதுவான கர்ப்பம் சுமார் 40 வாரங்கள் வரை நீடிக்கும். குறைமாத குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடுமையான உடல்நல பிரச்சனைகள் இருக்கும். இவ்வாறு குறை மாதத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான முக்கிய கரணம், மன அழுத்தம், நோய் தொற்றுகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஆகும்.

சுவாச பிரச்சினை, இதய பிரச்சினை, மூளை பிரச்சினை, வெப்பநிலை கட்டுப்பாட்டு சிக்கல்கள், செரிமான பிரச்சனைகள், இரத்த பிரச்சினைகள், வளர்சிதை மாற்றங்கள், நோய்எதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகள் போன்றவை ப்ரீ – மெச்சூர் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைந்தகால சிக்கல்கள் ஆகும்.

பெருமூளை வாதம், கற்றலில் சிக்கல், பார்வை பிரச்சினைகள், காது கேட்கும் பிரச்சினைகள், பல் பிரச்சினைகள், நடத்தை மற்றும் மனநல பிரச்சினைகள், தொடர் சுகாதார பிரச்சினைகள் போன்றவை நீண்ட கால சிக்கல்கள் ஆகும். இவை எல்லாவற்றுக்குமே கே.ஜி. மகப்பேறு பிரிவில் எளிதாக தீர்வு காணப்படுகிறது.

கர்ப்பிணியின் பொன் சிரிப்பே எங்களின் வெற்றி

–  டாக்டர் திவ்யா, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்

கர்ப்பம் தரித்த பெண்கள், முதல் முறையாக பரிசோதனைக்கு வரும்போது ஸ்கேன் எடுத்து பார்க்கப்படும். அதில், கருவினுடைய தன்மை எந்த அளவில் இருக்கிறது என தெரியவரும். சரியான பகுதியில் கர்பப்பைக்குள் குழந்தை இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

கருவில் உள்ள குழந்தையின் நாடித்துடிப்பு ஆராயப்படும். இதில், குறைபாடு இருந்தால், தாய்க்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்படும். மீண்டும், மூன்று மாதத்திற்கு பிறகு ஸ்கேன் உள்ளிட்ட பிற பரிசோதனைகள் செய்யப்படும். அதில் குறைபாடுகள் இருந்தால், அதுவும் நிவர்த்தி செய்யப்படும்.

ஹீமோகுளோபின், தைராய்டு, யூரின் இன்பெக்க்ஷன் உள்பட என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்பதை முதல் மூன்று மாதத்திற்குள் துல்லியமாக செக்அப் செய்து விடுவோம்.

கர்ப்பிணி பெண்கள், முதல் மூன்று மாதத்திற்கு, மாதம்தோறும் பரிசோதனைக்கு வர வேண்டும். பிறகு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், வாரம் ஒருமுறை பரிசோதனை தேவை. 7 மாதத்திற்கு பிறகு ஓ.ஜி.டி.டி என்னும் சிறப்பு ரத்தப்பரிசோதனை செய்யப்படும்.

9-வது மாதம் குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். குழந்தை நல்லபடியாக வளர்ந்திருந்தால் எடை எவ்வளவு இருக்கிறது என்பது ஆராயப்படும். அதற்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு, சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் போன்ற நோய் எதுவும் இல்லை என்றால், டெலிவரி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும். பரிசோதனையில்  எல்லாமே  நார்மலாக இருந்தால், அன்றாட வேலைகளை செய்துகொள்ள எந்த தடையும் இல்லை.

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், 9 மாதம் வரை வேலைக்கு செல்லலாம். கே.ஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் அத்தனை நவீன மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான முறையில் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்திரமாக குழந்தை பெற்றெடுக்கும், அந்த தாயின் முகத்தில் தோன்றும் புன்சிரிப்பே எங்களது வெற்றியின் அடையாளம்.

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு பின் இயல்பாக பணிகளை செய்யலாம்

–  டாக்டர் தீபா, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்

இன்றைய மருத்துவ உலகில், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை என்பது, ஒரு சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும். வயிறு அல்லது இடுப்புக்குள் உருவாகும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தலாம்.

இம்முறையில், மிகச்சிறிய அளவில் 2 அல்லது 3 துளைகள் போட்டு அதன் வழியாக கேமராவுடன்கூடிய டியூப் செலுத்தி, நோயுற்ற அல்லது சேதம் அடைந்த உறுப்பை அகற்றுவது ஆகும். மேல்பரிசோதனைக்காக, திசு (பயாப்ஸி)  மாதிரியும் எடுக்கலாம். உடலில் பெரிய அளவிலான தழும்பு  இல்லாமல் இம்முறையில் எளிதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை முடிந்து, ஒருசில நாட்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பலாம். அன்றாட பணிகளை வழக்கம்போல் செய்யலாம். அறுவை சிகிச்சையின்போது இரத்த இழப்பு, வலி ​​போன்றவை இருக்காது.

மகப்பேறு மருத்துவத்தை பொறுத்தவரையில் அதிகளவு அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி மூலமே செய்யப்படுகிறது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபி ஸ்டெர்லைசேஷன்),  கர்ப்பப்பை அகற்றம் (லேப்ராஸ்கோபி ஹிஸ்டெரெக்ட்டமி), சினைப்பை நீர்க்கட்டிகள் அகற்றம்,  கர்ப்பப்பை ஃபைப்ரைடு கட்டிகள் அகற்றம் (மயோமிக்டமி) போன்றவையும் எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.

சில பெண்களுக்கு, கர்ப்பப்பையில் முறையாக கரு உருவாகாமல், வயிற்றின் வேறு பகுதிகளில் கரு உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைக்கும் லேப்ராஸ்கோபி மூலம் சிறந்த முறையில் தீர்வு காண முடியும்.