ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட வாய்ப்பு: பைக் பிரியர்களுக்கு யமஹா கொடுத்த வாய்ப்பு

ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டி பார்க்கும் அனுபவத்தை யமஹா நிறுவனம் பைக் பிரியர்களுக்கு வழங்கியுள்ளது.

பைக் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட வேண்டும் என்பது கனவு என்று கூறலாம். வாழ்வில் ஒருமுறையாவது பைக் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை.

இதனிடையே யமஹா மோட்டார் நிறுவனம் ரேஸ் டிராக்கில் பந்தய வீரர்கள் போல பைக்கில் சீறிப்பாயும் வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ் டிராக்கில் யமஹா சார்பில் ‘டிராக் டே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட பைக் பிரியர்கள் கலந்து கொண்டு பந்தயம் நடைபெறும் ஓடுதளத்தில் தங்களது பைக் ஓட்டினர்.

இதற்காக இளைஞர்களுக்கு பந்தய வீரர்கள் அணியும் பிரத்யேக உடை, காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த ‘டிராக் டே’ நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள் முதல் முறையாக பந்தய வீரரைப் போல ரேஸ் டிராக்கில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.