கோவையில் சாராஸ் கண்காட்சி: துவக்க விழாவிற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி

கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் வருகின்ற மார்ச் 5 முதல் 12 வரை தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாராஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளதாவது: மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சி கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 5 முதல் 12 வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை காணவரும் அனைவருக்கும் நுழைவுகட்டணம் ஏதுமில்லை.

இக்கண்காட்சியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்படுகின்றது.

ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொள்ள Exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை 4 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.