ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.

காலை முதலே தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளரான தென்னரசுவை விட மூன்று மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட வெற்றி உறுதியானதை கொண்டாடும் விதமாக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கரும்புக்கடை பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வரை வெற்றி கோசங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் வெற்றி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்பு வெகு விமர்சையாக கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.