கோவை தொழிலதிபர்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை – கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உறுதி

கோவை தொழிலதிபர்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்களோடு தமிழ்நாடு அரசு தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமையில் நடைபெற்றது.

இதில் வர்த்தக சபை துணைத் தலைவர்கள் ராஜேஷ் பி லந்து, துரைராஜ், செயலாளர்கள் அண்ணாமலை, கார்த்திகேயன், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் ஏவி வரதராஜன், ராம்தாஸ் உள்ளிட்டோர் கோவையில் தொழில் துறைக்கு உள்ள இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜுவல்லரி பூங்கா அமைக்க வேண்டும், நிலத்தின் விலை அதிகமாக உள்ளதால் அரசு பொதுவான இடத்தை ஒதுக்கி புதிய தொழிற்சாலைகள் அமைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முதலீடு செய்வதற்கு ஏராளமானோர் ஆர்வமாக உள்ளார்கள். இதற்கு காரணம், தொழில் துவங்குவதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு எளிதாக்கியுள்ளது.

இதனால் நாட்டில் 14 வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு விண்ணப்பங்கள் லைசென்ஸ் முறைகள் நடைமுறையில் இருந்து வந்தன. இவற்றை எளிதாக்கி தொழிற்சாலை விரைந்து துவங்குவதற்கு விதிமுறைகளை அரசு எளிதாக்கி உள்ளதால் இந்த மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளோம்.

கோவை போன்ற வளர்ந்த மாவட்டங்களில் தொழில்பூங்கா கட்டமைப்பு வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளதால் அரசு பொதுவான இடத்தை தொழிற்சாலை அமைக்க, தொழில் பூங்காவாக உருவாக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பான நிலத்தை பெறுவதினால் யாருக்கும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தொழில் பூங்கா உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஜுவல்லரி பூங்கா அமைத்தால் இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்படும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவையில் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விரைவில் உயிரியல் பூங்காவும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.