அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கோவை ஆட்சியர் மற்றும் ஆணையர்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஏழைக்‌ குழந்தைகளின்‌ கல்வியை ஊக்குவிக்கவும்‌, மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டினை களையவும், ஏழ்மை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்துவதையும் தடுக்கும் வகையில் தமிழகத்தில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தினமும் காலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில்‌ சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் கோவை வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேற்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி மற்றும் 60 வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர். பள்ளி மாணவர்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.