அரசியல் நோக்கத்தோடு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

ஒரு நாள் பயணமாக கோவை வந்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கோவிட் பாதிப்பிற்கு பிறகு உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கிவரும் சூழலில் இந்தியா மிக வேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளான சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட் பாதிப்பு மட்டுமின்றி அதனை தொடர்ந்து, ஏற்பட்ட ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

சீனாவில் தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பண வீக்கம், வேலையின்மை ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இந்த சூழலில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டினை சுமார் 45 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் நலன் சார்ந்தும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும், கிராமங்கள், ஊரக பகுதிகள், தலித் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என அனைத்து தரப்பினரையும் முன்னேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

குறிப்பாக விவசாயம், நகர கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுக்காக பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் எதிர்காலத்திற்காகவும் ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பசுமை வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என ஏழு அம்சங்களை கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் விளங்கி வருகிறது.

டிஜிட்டலைசேஷன் பெருமளவில் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அரசில் எந்தவிதமான ஊழலும் இன்றி தாமதம் இன்றி மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடரும்.

மற்ற நாடுகளும் இந்தியாவிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று வருகின்றன. கடந்த 10 வருடங்களில் பிரதமர் இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில் செலுத்தி வருகிறார். புதிதாக நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் ஸ்கில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், 65 ஆண்டுகளாக இந்தியா கண்டிராத வளர்ச்சியினை கண்டுள்ளது. டெல்லியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவருக்குமான வளர்ச்சியை பிரதமர் மோடியின் அரசு வழங்கி வருகிறது. அடுத்த 15 வருடங்களில் சர்வதேச அளவில் முக்கிய பொருளாதார சக்தி மிகுந்த நாடாக இந்தியா திகழும்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர், ஜி.எஸ்.டி என்பது ஜிஎஸ்டி கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்படுவது. மேலும் கோவிட் பாதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட் அவற்றை கட்டுக்குள் வைத்து ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும் என தெரிவித்தார்.

மேலும் அரசியல் நோக்கத்தோடு இந்த பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என தெரிவித்தவர், மக்கள் வளர்ச்சிக்காகவும் இந்தியர்களின் எதிர்காலத்திற்காகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.