ஜெ.பி.நட்டா வருகை: அதிமுக தலைமை சந்திக்காதது ஏன்? – அண்ணாமலை பதில்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பாஜக பாஜக தேசிய தலைவர் நட்டா சுவாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணத்தினால் அவரது வருகை காலதாமதமானதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நட்டாவின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் இயங்கி வரும் 100 க்கும் மேற்பட்ட துணி கடைகள் மற்றும் புத்தக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசியதாவது: டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தினால் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வருகை காலதாமதம் ஆனது. எனவே தாங்கள் கோவிலுக்கு வந்து தமிழக மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். தேசியத் தலைவர் வந்தவுடன் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் உள்ளதாக கூறினார்.

தேசியத் தலைவர்கள் வந்தால் அதிமுக தலைமையினர் வழக்கமாக சந்திப்பார்கள். ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பாஜகவினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை நீலகிரியில் இருந்து துவங்க இருப்பதாக தெரிவித்தார்.

பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்.எல்.ஏ உள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும், அங்குள்ள அடிப்படை குறைகளை பெரும் அளவுக்கு தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப்பயணத்தால் பாஜகவிற்கு மிகப்பெரிய விஜயம் அமையும் எனக் கூறினார்.