எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் ‘மார்கெட்டிங் மேளா’

மேலாண்மை படிப்பு பயிலும் மாணவர்கள் மத்தியில் வியாபாரம் மற்றும் ஒரு பொருளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக்கல்லூரியில் ‘மார்கெட்டிங் மேளா’ நடைபெற்று வருகிறது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாணவர்கள் கல்லூரியிலேயே 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மார்கெட்டிங் மேளா என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் உணவு வகைகள், துணி வகைகள், புகைப்படங்கள், உடற்பயிற்சிக்கான மருந்து வகைகள், போக்குவரத்து சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் விற்பனை செய்தனர். மேலும், சந்தைப்படுத்தும் யுக்தியாக பொருட்களை வாங்குவோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை உடல் நல நிபுணர் ஜெய மகேஷ் மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியிலேயே தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஸ்டால்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ் குழுமத்தின் துணை முதல்வர்கள் தமிழ்செல்வம் மற்றும் விவேகானந்தம், முதுகலை வணிக மேலாண்மை துறை தலைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.