பிரதமரை விமர்சித்த பாக். அமைச்சர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

– வானதி சீனிவாசன் கேள்வி

140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, ‘கசாப்பு கடைக்காரர்’ என தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார். அதுமட்டுல்லாது, ‘பிரதமர் மோடியும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பவர், அந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி. ஐ.நா. போன்ற உலக அரங்குகளில், ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும், அந்நாட்டின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளப்படும். வெளியுறவுத்துறை அமைச்சரின் வார்த்தை சற்று தடித்தால்கூட, அது அவரது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும். தீராப் பழியை கொண்டு வந்துவிடும்.

அதனால், எந்தவொரு நாட்டிலும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர்கள் மிகவும் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவார்கள். ஆனால், பிலாவல் பூட்டோ சர்தாரி, தான் பொறுப்பான வெளியுறவு அமைச்சர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து, பேட்டை ரவுடி போல, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பேசியிருக்கிறார். அவரது அநாகரிகமான அத்துமீறலுக்கு, அங்கேயே நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்திருக்கிகிறார்.

ஒரே நாடாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் இந்தியா, பாகிஸ்தான் என பிரித்தனர்.

நியூயார்க் இரட்டை கோபுர குண்டு வெடிப்புக்கு காரணமான, பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த, இப்போதும் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான். பயங்கரவாதிகளுக்கு தங்கள் நாட்டில் பயிற்சி அளித்து, இந்தியாவுக்குள் அனுப்பி, அமைதியை சீர்குலைத்து வரும் நாடு பாகிஸ்தான். இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை போற்றி வளர்த்து வரும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், 140 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை தரம் தாழ்ந்த விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது. பிலாவல் பூட்டோ சர்தாரி, தனிப்பட்ட மோடியை எதிர்க்கவில்லை. இந்தியாவை உலகின் வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கும் பிரதமர் என்பதால் தான், விமர்சித்திருக்கிறார். அதாவது இந்தியாவை, 140 கோடி மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.

எனவே, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அமைதி காப்பது நாட்டின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, இனியாவது பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தக்க நேரத்தில், இந்திய மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

2007 குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது அன்று அம்மாநில முதல்வராக இருந்த மோடியை, மரண வியாபாரி என, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா விமர்சித்தார். அதற்கு குஜராத் மக்கள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறந்து விட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.