3 பேருக்கு மறுவாழ்வு அளித்த 3 வயது குழந்தை

மூளைச்சாவடைந்த 3 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

குழந்தை தியான் (வயது 3) அவரது பெற்றோருடன் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசித்துவந்தார். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட தியான் கடந்த 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குழந்தையின் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி குழந்தைக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தார்.  தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் இருதய வால்வ், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய குழந்தை தியான் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.