கற்பகம் கல்லூரியில் ஆய்வு மாநாடு

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் வருடாந்திர ஆய்வு மாநாடு நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு, கற்பகம் உயர்கல்விக்கழக வேந்தர் ராமசாமி முன்னிலை வகித்தார். தொடக்கவுரையாற்றிய துணைவேந்தர் வேங்கடாசலபதி, ஆண்டுதோறும் நடைபெறுகிற வருடாந்திர ஆய்வு மாநாடு, ஆய்வாளர்களின் ஆய்வுத்திறன் மேம்பாட்டுக்கு உறுதுணை செய்வதை விளக்கினார்.

கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் இராச.வசந்தகுமார் தலைமையுரையாற்றினார். ஆய்வாளர்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி. அத்தகைய உயர்ந்தநோக்கத்திலான தொடர் கற்றல் முயற்சியும், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வமும், ஆய்வு மனப்பான்மையும், சமூகப்பொறுப்புணர்வும் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

விழாவில், சென்னை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்.ஆர்.ஐ அறிவியல் மையத்தின் தலைமை ஆய்வறிஞர் சண்முகம், ஆய்வாளர்களின் 317-ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டு ஆய்வுரை வழங்கினார்.

ஆழ்ந்த உற்றுநோக்கல், தெளிவாக உணர்தல் மற்றும் புதியவற்றை உருவாக்கல் ஆகியவை சிறந்த ஆய்வாளரின் அணுகுமுறைகள். ஆய்வாளர்கள், சமுதாயப்பொறுப்புணர்வுடன் மேற்கொள்கின்ற பயன்பாட்டு ஆய்வுகள், காலத்தை வென்று அவர்களை வாழச்செய்கின்றன.

இன்றைய நாளில் ஆய்வுலகில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே, சமுதாய மேம்பாட்டுக்கு வகைசெய்யும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, விழாவில் ஆய்வுப்பிரிவின் இயக்குநர் பிரதீப் வரவேற்புரை வழங்கினார். ஆய்வுப்பிரிவின் இணைஇயக்குநர் சுரேஷ் பிரபு நன்றி கூறினார். புல முதன்மையர்களும், பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.