கோவையில் திமுக அரசை கண்டித்து டிச.,2 உண்ணாவிரதம்

– எஸ்.பி வேலுமணி அறிவிப்பு

கோவையில் திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2 ஆம் தேதி எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிமுக திட்டங்கள் செயல் படுத்தபடாமல் உள்ளது. அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஒன்றரை ஆண்டுகளில் கோவைக்கு முதலமைச்சர் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. கேட்ட திட்டங்களை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார்.

பத்து ஆண்டுகளில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்துள்ளோம். அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது.

பல மேம்பாலங்கள் கட்டினோம். கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஒன்றரை ஆண்டுகளில் எதாவது செய்துள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பினார். கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காதீர்கள். கொசு மருந்து அடிக்கவில்லை என குற்றம் சாட்டியதோடு, அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என தெரிவித்தார்.

மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.