சர்க்கரை நோய் விழிப்புணர்வு கோவையில் வரும் ஞாயிறு சிறு தானிய பொருட்காட்சி

கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் 27 ஆம் தேதி சிறு தானிய பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சி குறித்த விளக்க கையெட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டாக்டர் வேலுமணி வெளியிட, இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை, கேஜி குழும இயக்குனர் வேலுசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டார்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர் டாக்டர் வேலுமணி, ஜெயலட்சுமி தம்பதியினர் கூறுகையில்: 140 கோடி மக்கள் தொகையில் 10 கோடி மக்களுக்கு மேல் இரண்டாம் வகை நீரழிவு நோயின் பாதிப்பு உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

40 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய் என்றால் ஒரு சிலருக்கு இருக்கும் பணக்கார வியாதி என்று சொல்லுவார்கள். இன்று நாட்டில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டது. இதற்கு நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் விளைவுகள் சர்க்கரை நோயில் கொண்டு போய் விடுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பாக ஊடுருவிச் சென்று பெரும் பாதிப்பை உருவாக்குவதால் மனித சமுதாயத்தை, வாழும் முறையை சீர்குலைப்பதோடு, பொருளாதாரத்தையும் சீரழிக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.

சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் சிறுதானிய பொருட்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் கம்பு, ராகி, சோளம், திணை உள்ளிட்ட எட்டு வகையான சிறு தானிய பொருட்களைக் கொண்டு உணவுப் பொருள்கள் தயாரித்து வைக்கின்றோம். பொது மக்களுக்கு இது குறித்த விளக்கமும் அளிக்கப்படும். தொடர்ந்து பங்கேற்கும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் குறித்த பட்டிமன்றமும், மருத்துவர் சிவராமன் பங்கேற்று ‘நீரழிவை கட்டுப்படுத்தும் நல் உணவுகள்’ தலைப்பில் பேசுகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ப நுழைவு கட்டணம் இல்லை. பொதுமக்கள் இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்க வேண்டும்.

சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பெற்றிட பிரத்யேகமான புத்தகம் எழுதப்பட்டு அவற்றை வெளியிட உள்ளோம். புத்தகத்தில் சர்க்கரை நோய் தாக்கம் என்ன, அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி, உணவு பழக்கங்கள் முறைபடுத்துவது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது. இவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கோவிந்தராஜ் வெளியிடுகிறார். புத்தகத்தை முன்னாள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் அசோக் பெற்றுக் கொள்கிறார்.

இதில் பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று சர்க்கரை நோய் குறித்த தகவல்களை, சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.