வங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்

அரசு வேலையை விரும்புபவர்களில், வங்கிப் பணியில் சேர்வதற்கே அனேகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன. வங்கித் தேர்வுகள் கொஞ்சம் சவாலானதுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்விகளுடன், ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகளில் சேர்வது சாத்தியமாகும்.

எப்போதும் தயார்நிலை

அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் எப்போதும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு திறமையை மெருகேற்றி வந்தால் எளிதில் வெற்றி பெறலாம். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுக்கு தனித்தனியே தயாராக வேண்டியதில்லை.

போட்டியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து, திறமையானவர்களை வடிகட்டத்தான் 2 தேர்வுகள் நடக்கிறது என்பதால் நன்றாகப் படித்தாலே 2 தேர்வுகளிலும் ஜெயித்துவிடலாம்.

ரீசனிங் பயிற்சி

ரீசனிங் மற்றும் ஆப்டிடியூட் சார்ந்து 50 கேள்விகள் இடம் பெறும். உங்களின் பகுத்தறியும் திறனை புடம்போட்டு சோதிக்கும் தேர்வு என்பதால் ஆழ்ந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ரீசனிங் பகுதிகளுக்கு எளிதில் விடையளிக்க முடியும். உதாரணமாக ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் படம் அல்லது வடிவத்தின் அடுத்தநிலை எப்படியிருக்கும் என்றோ அல்லது பொருத்தமான அடுத்தபடம் எது என்றோ நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இதற்கு துரிதமாக விடைகாண புதிர்கள், மூளை விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது அவசியம்.

கணித பயிற்சி

ஆப்டிடியூட் வினாக்களில் கணிதப் புலமை உள்ளவர்கள் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். 12-ம் வகுப்பு வரை கணிதம் படித்திருந்தால் இந்தப்பகுதி சுலபமாக இருக்கும். பெரும்பாலான கேள்விகள் அரித்மெடிக், ஜியாமட்ரி சார்ந்து கேட்கப்படும். கணித சூத்திரங்களை நினைவு வைத்து பயிற்சி செய்தால் எளிதாக விடைகாண முடியும். தீவிரமான பயிற்சியின் மூலம் இதை சாத்தியமாக்கலாம்.

ஆங்கிலப் பயிற்சி

ஆங்கில மொழி தொடர்பாக 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பத்தியிலிருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்வது, ஆங்கில வாக்கியங்களில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பது, வாக்கியங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற வகை வினாக்கள் இப்பகுதியில் இடம் பெறும். அடிப்படை ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு, புரிந்து கொள்ளும் திறன் ஆகிய திறமைகளை வளர்ப்பது மதிப்பெண்களை அள்ள உதவி புரியும். வார்த்தை வளத்தை அதிகரித்துக் கொள்ள ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளை தொடர்ந்து வாசித்து பயிற்சி பெற வேண்டும்.

நிதித்துறை அறிவு

வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த கேள்விகள் 40 எண்ணிக்கையில் இடம் பெறுகிறது. இந்தியப் பொருளாதாரம், இந்திய வங்கித்துறை, நிதி அமைப்பு, நிறுவன நடைமுறைகள், அரசு திட்டங்கள் பற்றி ஆழமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது இந்த பகுதிக்கு விடையளிக்க உதவியாக இருக்கும். அன்றாட செய்தித்தாள்கள், நிதி மற்றும் வங்கிப் பணிகள் சார்ந்த பருவ இதழ்களை தவறாமல் படித்து வந்தால் இவை பற்றிய தகவல்களை தொகுத்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

கணினி திறமை

கணினி அறிவு சார்ந்து 20 கேள்விகள் கேட்கப்படும்.

வங்கித்துறைக்கு கணினி அறிவு மற்றும் திறமை முக்கியமானதாகும். கணினி சார்ந்த அடிப்படை அறிவு அவசியம். தவிர அடிப்படை கணினித் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள், இணையதளம், நவீன நுட்பங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பம் பற்றிய பரந்த அறிவுத்திறனும் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

நேர்காணல்

எழுத்து தேர்வுக்கு அடுத்தகட்டம் நேர்காணல். புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது. நேர்காணலில் இந்த கேள்விகளைத்தான் கேட்பார்கள் என்று குறிப்பிட முடியாது. ஆனாலும் பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த அடிப்படைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பரபரப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் இடம் பெறும் என்று யூகிக்கலாம். சொந்த விவரங்கள், வேலை பற்றிய அறிவு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். வங்கி வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் தேர்வாகவே நேர்காணல் இருப்பதால் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

திரட்டும் திறன்

தேர்வுகளுக்குத் தயாராகும்போது பலதுறை தகவல்களையும் திரட்டிப் படிப்பது அவசியம். பள்ளிப் பாடப் புத்தகங்கள், இயர் புக்குகள், பொது அறிவு தொகுப்பு புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். தினசரி பேப்பர்களை படித்து குறிப்பு எடுத்துக்கொள்வதும் அவசியம். அதில் இடம்பெறும் மாதிரி வினாப்பட்டியலையும் தொகுத்து வைத்துக்கொள்ளலாம்.

பயிற்சி எனும் கலை

வங்கித் தேர்வு வினாக்கள் நுட்பமானதாக இருக்கும். துல்லியமாக புரிந்து கொண்டு வேகமாக விடையளிக்கும் திறனே குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க உதவியாக இருக்கும். முறையான பயிற்சி இன்றி இது சாத்தியமில்லை. நன்கு பயிற்சி எடுத்தால் கேள்விகளை படித்தவுடன் புரிந்து கொண்டு விடையளிக்க முடியும். மாதிரி தேர்வுகள் மூலம் திறமையையும், தேர்வை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்து வர வேண்டும்