பேரிடர் காலத்தில் என்ன செய்வது? தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு

பேரிடர் காலத்தில் தம்மை தற்காத்துக்கொண்டு பிறரையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட தீயணைப்புத்துறையினர் இன்று நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

இதை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்புப் பணி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது தீயணைப்புத் துறையினர் விபத்தோ அல்லது கட்டிடம் இடிந்து விபத்து நிகழ்ந்தாலோ உடனடியாக விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

மேலும், வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்த செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.