கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தீ விபத்து

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பந்தய சாலை பகுதியில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தின் அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் சுகாதார பிரிவுக்கான பிளிச்சிங் பவுடர், பினாயில், ஆசிட் உட்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்படும் அறையும் உள்ளது.

மேலும் அந்த கட்டிடத்தில் பல்வேறு ஆவணங்களும் வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென அந்த கட்டிட்டத்தில் தீ பிடித்தது. பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக கடும் நெடியுடன் புகை வெளியேறியது.

இதனால் அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது. கடும் நெடியுடன் புகை வெளியேறியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறிது நேரம் சுவாசிக்க சிரமபட்டனர்.

தீ அணைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.