கோவையில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்

கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு நடத்தும் 4 சக்கர வாகனங்களுக்கான இந்திய தேசிய ராலி சாம்பியன் ஷிப் போட்டியின் இரண்டாம் சுற்று ஜூலை 30, 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஜென்னீஸ் ரெசிடெண்சியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டார்.

போட்டியின் சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்கும் 54 கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக பந்தயம் நடைபெறும் களங்களுக்கு சென்றது.

முன்னதாக ஜென்னீஸ் ரெசிடெண்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்த ரேலியை விளம்பரப்படுத்தும் ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் பிரேம்நாத், பந்தய வீரர்கள் கௌரவ் கில், கர்ணா கடூர், ஆதித்யா தாக்குர், பாபிட் அமர், ஷிவானி ப்ருத்வி மற்றும் சாம்ராட் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவையில் செயல்படும் தங்கள் நிறுவனம் இந்த சிறப்புமிக்க கார் பந்தயத்தை கோவையில் இந்த ஆண்டு நடத்துவது தங்களுக்கு பெருமிதமாக இருப்பதாக ப்ளூ பேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் பிரேம்நாத் கூறினார். வரும் காலங்களில் இந்த விளையாட்டுக்கு மக்களிடையே பேராதரவு அதிகம் கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாக கூறி, அனைத்து வீரர்களுக்கும் ப்ளூ பேண்ட் சார்பில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மற்ற அணைத்து வீரர்களும் இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதை பெருமையாக பார்ப்பதாகவும், தாங்கள் போட்டியிடும் பிரிவில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஆவலாக உள்ளதாக தெரிவித்தனர்.

கார் பந்தயம் ஜூலை 30, 31 அன்று வெள்ளலூர் ஜி ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும், கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும் நடைபெறும். வெற்றிபெறும் வீரர்களுக்கு ஞாயிறு பிற்பகல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.