தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க ஆய்வு

அமைச்சர் மா சுப்பிரமணியம்

கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது, குரங்கம்மை பாதிப்பு 63 நாடுகளில் பெரியளவிலான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு  குரங்கம்மை நோய் அறிகுறி  கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில், குரங்கம்மை பரவலால்  பாதிக்கப்பட்ட 63 நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து வருகிறது.

கோவையில் காலை மற்றும் மாலையில் வரும் சர்வதேச விமானங்களில் 150 முதல் 170 பயணிகள் வருகிறார்கள். ஜூலை மாதத்தில் விமான பயணிகளுக்கு  செய்யப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனாவோ குரங்கம்மை நோயோ கண்டறியப்படவில்லை.

கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்.டி பி சி ஆர் மையம் தயார் நிலையில் உள்ளது. யாரேனும் அறிகுறியுடன் வந்தால் அவர்களை தனிமை படுத்த ஒரு படுக்கை வசதியுடன் தனி  அறை தயார் நிலையில் உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையோ அல்லது பிற இடங்களிலோ பிரத்யேகமாக ஒரு வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கம்மைக்கென சென்னையை தொடர்ந்து கோவையிலும் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் படுத்தப்பட உள்ளது. குரங்கம்மை நோய் கண்டறிய தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைக்கும்  பட்சத்தில் சென்னை கிங் ஆய்வு மையத்தை பயன்படுத்துவோம்.

கேரளா -தமிழகம் இடையே 13 இடங்களில் பொது பாதை உள்ளது. முகம் மற்றும் முழங்கையிலோ கொப்புளங்கள் இருந்தால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்று கிழமை அன்று தமிழகம் முழுவதும்  50 ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளோம் என்று தெரிவித்தார்.