300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தினர்

குஜராத் மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருக்க, சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக (ஜூன் 7 ஆம் தேதி) இரவு 8 மணியளவில் சிறுவன் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20 – 25 அடி ஆழத்தில் சிக்கி கொண்டான்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாப்பாத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு வெளியே எடுத்தனர்.

பின்னர் சிறுவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ராணுவத்தினர் மீட்ட குழந்தையின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.