இலங்கைக்கு கூடுதல் நிதியுதவி தேவை – ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை வாழ் மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததால் அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது எனக் கூறியுள்ள அவர், அதனை பழைய நிலைக்கு வலிமையாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழலே நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.