தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

மே 4 முதல் மே 6 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.