பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு – அமைச்சர் அன்பில் மகேஸ்

சாதி கயிறு கட்டுவதால் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை மாடலாக கருதக்கூடாது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து வருகிறோம்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களை தடுக்க யுனிசெப் போன்ற அமைப்பு மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.