ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 31வது விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் இந்தியன் ரயில்வேயில் பணிபுரியும் சர்வதேச அளவிலான தடகள வீராங்கனை சிவ அன்பரசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது.

கல்லூரியின் விளையாட்டுத் துறைச் செயலர்கள் உறுதிமொழி எடுத்ததும் பேராசிரியர்கள் மற்றும் மாணவியருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

தொடர்ந்து கல்லூரியின் விளையாட்டுத் துறைச் சாதனைகளை ஜாய்சி எடுத்துக் கூறினார்.

கல்லூரி முதல்வர் சித்ரா பேசும்போது, எந்த வயதிலும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் வாழ வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினர் பேசும்போது, எந்தத் துறையிலும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி பெற முடியும் என்ற அவர், மனவலிமை இருந்தால் எந்த இடர்களையும் கடந்து வர முடியும். ஒவ்வொருவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேராசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த அணிவகுப்புக்கான முதல் மூன்று இடங்களை முறையே ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல் துறை மாணவிகள் பெற்றனர்.