பேரவை நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்புங்கள்! – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் சேவை மையம் சார்பில் நலம் இலவச மருத்துவ முகாமின் துவக்க விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதியில் நலம் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவ முகாமில் 8 விதமான பிரிவில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை உதவி அளிக்கப்படும்.

தெற்கு தொகுதியின் ஒவ்வொரு பூத்திர்க்கும் இதை கொண்டு செல்வோம். சட்டப்பேரவை ஜனநாயக ரீதியில் நடைபெற வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் ஆளும் கட்சிக்கு எந்தவிதமான சங்கடம் வந்து விடக்கூடாது என்பதில் சபாநாயகர் உள்ளார். நேரடி ஒளிபரப்பு இருந்தாலும் வெளிவரும் பொழுது தொழில்நுட்ப பிரச்சினை எனத் தெரிவிக்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பில் கேள்வி நேரத்தை மட்டும் ஒளிப்பரப்புகின்றனர்.

அமைச்சர்கள் பேசுவது மட்டும் முழுவதும் வருகிறது. முழுமையான வீடியோக்களை வெளிவர வேண்டும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்கக் கூடாது.

கோவை பந்தய சாலையில் சாலை மோசமாக உள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியது முழுவதுமாக வெளிவரவில்லை. இதை ஒரு சவாலாக பார்க்கிறேன்.

இலங்கை மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அழிவதற்கு காரணம் யார்? என்பதையும் கேட்கிறேன். நீங்கள் சொல்லும் மாடலில் முள்ளிவாய்க்காலில் இறந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு இருக்கிறது. அதையும் தற்போது நினைத்துப் பாருங்கள் என நினைவு படுத்துவதாக தெரிவித்தார்.