ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: முதல்வரே மன்னிப்பு கேளுங்கள்! – அண்ணாமலை ஆதங்கம்

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்றிருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு போராட்டக்காரர்களில் சிலர், ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப் போவதாக, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் சென்ற கார் மீது மயிலாடுதுறையில் கல்வீசி தாக்கி உள்ளார்கள். மாநிலத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை கட்டிக் கொண்டு தனது கட்சி சித்தாந்தத்தோடு மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. ஆளுநர் வாகனம் மீது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொண்டர்கள் எதேச்சையாக தாக்குதல் நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே அந்த கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும், ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்க்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலைக்குள் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். இது தான் பாஜகவின் நிலைப்பாடு.

அநாகரீகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பாஜக விரும்பவில்லை. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கடிதம் எழுதப் போகிறோம். உடனடியாக உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் உள்துறை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றார்.