தலைவிரித்தாடும் பிரிவினைவாதம் கலை வாயிலாக மனித நேயத்தை பரப்புவோம்! – இயக்குனர் பா.ரஞ்சித்

பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் மக்கள் மத்தியில் கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்ப வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக கருத்துடைய படங்களை இயக்கி எடுப்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வரும் இயக்குநர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித்.

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என சமூக கருத்துக்களை கொண்ட படங்களை எடுப்பதில் அதிக முனைப்பு காட்டினார். மேலும் அரசியல் களத்திலும் எப்போதும் தனது கருத்தை தைரியமாக பேசி வருகிறார்.

இவரின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனிடையே பி.கே. ரோசி திரைப்பட விழா, புத்தக கண்காட்சி, மேடை நாடகங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு பேசியதாவது: கொண்டார். “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களை நான் நடத்தியுள்ளேன். சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும். நாட்டில் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனித நேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும்.

கலைகளின் மூலமாக மக்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை பேச வேண்டும். நீலம் பண்பாட்டு மையம் மக்களிடம் தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் முரண்கள் குறித்து பேசி வருகிறது. குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. மனித மாண்பை மீட்டெடுக்க நாம் தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.