விரைவில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் துவங்கப்படும் – உதயநிதி ஸ்டாலின்

திமுக அரசு சொன்னது போல் விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவை சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

எல்லோரும் ஊசி போட்டீர்களா எனக்கேட்டு பேச்சை துவங்கிய அவர், இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலே போதுமானது என தெரிவித்தார். கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.

கோவை மாவட்ட மக்களை நம்பவில்லை எனக்கூறிய அவர், வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என சொல்றீங்க செஞ்சீங்களா என கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதும் கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க எனக் குறிப்பிட்ட அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி வீட்டில் மக்களை முடக்கியது தான் அவர்களின் சாதனை. உயிரிழப்புகளை தடுக்க 7 கோடி தடுப்பூசிகளை போட்டது திமுக தான் எனவும் அதிமுக ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள் எனவும் இது போன்ற திட்டங்களால் தான் தனியார் நாளிதழ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தியாவின் நம்பர் ஒன் சி.எம் ஸ்டாலின் தான் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி முடிந்து செல்லும் போது கஜனாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர் எனவும் ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது என ராகுல், மோடிக்கு சவால் விட்டுள்ளார். இதற்கு காரணம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார் என்பதாலேயே எனவும் தெரிவித்தார்.