விராலியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தினால் பொதுமக்கள் அச்சம்

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் பகுதியில் குடிநீருக்காகவும், உணவிற்காகவும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் குடிநீருக்காகவும், உணவு தேடியும் விவசாய நிலங்களுக்கு வந்து விளைபொருட்களை உண்பதும் சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் மூன்று யானைகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் இரவு நேரங்களில் விளைநிலங்கள் வழியே ஊருக்குள் வருவதும், காலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று வருவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் இரண்டரை மணி அளவில் குதிரைகாரர் தோட்டம் என்ற தனியார் தோட்டத்திற்கு வந்த மூன்று யானைகள் விளை நிலங்களின் வழியே ஊருக்குள் வந்து உலா வந்ததுடன் தண்ணீர் போன்றவற்றை பருகிவிட்டு காலையில் விளை நிலங்களின் வழியே வனப்பகுதிக்கு செல்வதை கண்ட விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் விளைநிலங்களை கடந்து செல்லும்போது ஏதேனும் மனித விலங்கு மோதல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ள நிலையில் வனத்துறையினர் உடனடியாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி காட்டு யாணைகள் ஊருக்குள் வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.