கோவை மாநகராட்சி சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் – பி.ஆர்.நடராஜன் எம்.பி கோரிக்கை

கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு அளித்தார்.

கோவை மாநகராட்சியில் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளரகளிடம் கூறியதாவது:

கோவை மாநகர மன்றம் தேர்வு செய்யபடாத காலத்திலே, அண்ணா திரவிட கழகம் இருந்த காலத்தில் எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்தத்தில் அமல்படுத்த தீர்மானிக்கபட்டு பணிகள் ஆரம்பிக்கபட்டது.

அன்றைய தினம் எதிர்க்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து சூயஸ்க்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தோம். பல இடங்களில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடத்தில் சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்துள்ளோம்.

கோவை நகரத்தின் குடிநீர் என்பது அரசினுடைய குடிநீர் வாரியத்தின் மூலமாகவே செய்யப்பட வேண்டுமே தவிர தனியார் நிறுவனங்களால் செய்யப்பட கூடாது

இந்தியாவிலேயே எந்த நகரத்திலும் இது இல்லை. ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லாமல் திமுக தேர்தல் அறிகையில் கூறியது போல ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இது குறித்து அமைச்சர் இடத்திலும் கூறியுள்ளோம். சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடந்து போராடும் எனக் கூறினார்.